சனி, 22 பிப்ரவரி, 2014

தேர்தல் நம் பார்வை



(தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியருக்கு எழுதிய மடல்)
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
நம் தமிழர் எழுச்சி  சுறவம் 2045 (சனவரி 2014) இதழின் ஆசிரியவுரையில் ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகளை உவந்து பாராட்டி எழுதியிருந்தீர்கள். ஆம் ஆத்மியிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கத்தான் வேண்டும். ஆனால் ஆத்மியைப் பாராட்டுகின்ற போதே தமிழியக்கங்களின் மீதான தங்களின் திறனாய்வை - வெறுப்புணர்வைஅது இயலாமையின் வெளிப்பாடாக இருந்த போதிலும் எம்மால் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அதிலும்எங்காவது ஓரிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் செய்யப் போவதாகக் கூறி….’ எனத்தொடங்கும் தங்களின் திறனாய்வை நீங்கள் யாரை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்களோ அவர்களோடு அந்த நிகழ்வில் பங்கு கொண்டவன் என்ற முறையிலும், ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியுமா? ஈழ விடுதலைக்கு உண்மையான ஆதரவு தமிழக மக்கள் விடுதலைப் போராட்டமே என்ற கருத்தை வலியுறுத்தி பரப்புரை செய்து வரும் அமைப்பைச் சார்ந்தவன் என்ற முறையிலும் சில சொல்ல வேண்டியுள்ளது.
விடுதலையின் எல்லையில் நின்று கொண்டிருந்த ஈழப்போராட்டம் இந்திய உதவியினால் சீர்குலைக்கப் பெற்று தொடங்கிய இடத்திற்கும் பின்னால் போய்விட்டதைப் பார்த்தும், முப்பது ஆண்டுகாலம் உலகம் வியக்கும் போரை நடத்திய தேசியத் தலைவரால் தமிழீழம் பெற முடியாதாம். முதலில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு விடுதலைப் பெற்றால்தான் தமிழீழம் பெற முடியுமாம். இவர்கள் இதைப் பெற்றப் பின்னர் அங்கே போய் தமிழீழம் பெற்றுத் தந்து விடுவார்களாம். நம்புவோம்! நம்புவோம்!’ என்ற தங்களின் எள்ளலில் எம்மைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் எந்த இடத்திலும் தமிழக விடுதலை  பெற்ற பின்னரே தமீழீழம் விடுதலை பெற இயலும் என்று கூறியதில்லை.
பஞ்சாப், நாகா, அசோம், மிசோரம், காசுமீர் விடுதலைப் போராட்டங்களை எப்படி ஆதரிக்கிறோமோ அதைக்காட்டிலும் நம் தமிழினத்தவர் என்ற நிலையில் ஈழப்போராட்டத்தில் அதிக அக்கறையும் பங்களிப்பும் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். ஆனால் எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவான நம் களம் என்பது நம் தமிழ்நாடு என்பதை உணர்ந்த காரணத்தால், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை நடத்துவதே ஈழத்திற்குச் செய்யும் உண்மையான ஆதரவாக அமையும் என்று கருதுகின்றோம். சோம்பித் திரியும் இந்தியப் படைக்கு ஈழ அழிப்பு என்ற வேலையைத் தருகிற இந்தியாவை எதிர்த்து தமிழ்நாட்டில் ஓர் விடுதலைப் போராட்டம் நிகழுமானால் இந்தியாவின் பார்வை ஈழத்தின் மீது செல்லாது தமிழகம், மிசோரம், பஞ்சாப் போன்ற நாடுகளின் மீதே நிலைத்திருக்கும்; சிங்களம், இந்தியா என்ற இரட்டை எதிரியை எதிர்கொள்ள வேண்டிய துன்பச் சுமை ஈழப்போராளிகளுக்கு சற்று குறைந்திருக்கும்; தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் அறவழிப் போராட்டங்கள் என்ற சட்ட வழியிலான போராட்டங்களாக இல்லாமல் கருவிப் போராட்டங்களாக மாற்றம் பெற்றிருக்கும். ஆனால் இன்று வரை தமிழ்நாட்டுத் தமிழர்கள் தம் அடிமைத்தனத்தைப் பற்றிப் பேசாமல் ஈழத்தமிழரின் உரிமை பற்றியே பேசி வந்ததால் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கக் கூட இயலாமல் முள்ளிவாய்க்காலை வேடிக்கைப் பார்க்க நேர்ந்தது. உண்மையாகவே நாம் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை சற்று முன்னுக்குத் தள்ளியிருந்தாலே ஈழப்போரில் இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு நேர்ந்திராது.
தங்களின் எள்ளலை நாங்கள் தலைகுனிந்து ஏற்றுக் கொள்கிறோம். எம் போராட்டம் தம் பாதையிலிருந்து வழுவி ஒலிவாங்கியையும், எழுது கோலையும் கருவிகளாகக் கொண்ட போராட்டமாக மாறியதன் இழிந்த நிலைக்கான பாராட்டுப் பத்திரமாக அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வரலாறு இந்த இடத்திலேயே நின்று விடாது என்பதையும் எண்ணி ஆறுதல் அடைகிறோம்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் தெளிவுபடுத்திட விரும்புகின்றேன். ஏனெனில் தாங்கள் முன்னிதழின் அட்டைப் படத்தில் படம் போட்டுப் பாராட்டி, அடுத்த இதழிலேயே விளக்குமாற்று அடி கொடுக்குமளவிற்கு தேர்தல் பற்றிய நிலைப்பாட்டில் முரண்பட்டு நிற்கும் அவர்களின் நிலைப்பாட்டில் நான் இல்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
எல்லாத் தளத்திலும் நம் தமிழ்நாட்டு விடுதலைக்கான பணி நடைபெற வேண்டும் என்பதில் அசையாத விருப்பம் உள்ளவன் நான். ‘தேர்தல் பாதை திருடர் பாதை; மக்கள் பாதை புரட்சிப் பாதைஎன்ற முழக்கத்தில் உள்ள அறியாமையை உணர்ந்திருக்கிறேன். மக்களின் படிநிகராளிகளை ஏதாவது ஒரு வடிவில் தேர்ந்தெடுக்கவே இயலும். தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுத்தல் எப்படி? கட்சியின் அரசியல்குழுவைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு தேர்தல் தேவைதானே?
இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்கிறேன்என்ற உறுதிமொழி தந்து போட்டியிடுகிற இந்த தேர்தலை நாம்  புறக்கணிக்கிறோம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடுதான். நாம் புறக்கணிப்பதால் இந்தியத் தேர்தல் நடைபெறாமல் போய்விடுகிறதா? இல்லையே.
தேர்தல் புறக்கணிப்பை ஓர் அரசியல் ஆக்காமல், இந்தியத் தேர்தல் நடத்துவதைத் தடுக்காமல் நாம் ஒப்போலை போடுவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதை தேர்தல் புறக்கணிப்பு என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அதே நேரத்தில் தேர்தலில் ஈடுபட்டு இன்னும் பத்தாண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம் என்றதான மாயையும் நமக்கில்லை. தமிழ்நாட்டு விடுதலை என்பது கருவியேந்திய மக்கள் போரின் மூலமே அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் அந்த மக்களை அணி திரட்டுவதற்கும் அந்த மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்கும், அளவிடுவதற்கும் இன்றையச் சூழலில் தேர்தலை விட எளிதான கருவி எது?
ஆண்டு கொண்டிருக்கும் இந்திய, திராவிடக் கட்சிகளின் போலிமைகளை விளக்கப்படுத்தி உணர்ந்து கொண்ட மக்களைப் பார்வையாளர்கள் நிலையிலிருந்து பங்கேற்பாளர் என்ற நிலைக்கு உயர்த்திட தேர்தலைத் தவிர வேறு கருவி இன்று வாய்த்திட வில்லையே!
ஆட்சி அமைப்பதற்காக அல்ல; நம் பலம் என்ன என்று காட்டுவதற்காகஅறிந்து கொள்வதற்காகதமிழ்த்தேசிய அணி தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். ‘கருவி வழியிலே விடுதலையை வென்றெடுப்போம்; இந்தியத் தேர்தலைப் புறக்கணிப்போம்என்று கூறும் புரட்சியாளர்கள் புலிகளைப் போல் தேர்தலில் ஈடுபடாதிருக்கட்டும். ஆனால் புலிகள் அமைத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் போல் இங்கும் ஓர் கூட்டமைப்பு வேண்டும். அதற்கு புரட்சியாளர்களும் உதவிட வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாட்டோடே தேர்தலை நாம் அணுக வேண்டுமே யன்றி ஆம் ஆத்மியின் வெற்றியினைப் பார்த்து அதுபோல் நாமும் வென்று விடலாம் என்று கனவு காண்பது சரியல்ல என்பது எம் கருத்து.
ஊழல் மட்டும் சிக்கல் என்றால்
ஆம் ஆத்மி சரிதான்;
ஆனால்,
எங்களுக்கு இந்தியாவே சிக்கல் என்றால்…’
என்றொரு துணுக்கை இணையத்தில் கண்டேன். இதையே தங்கள் முன் வைக்கிறேன்.
அன்புடன்
தமிழ். முகிலன்
மாத்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக