ஞாயிறு, 28 டிசம்பர், 2008

மரத்தமிழர்களே அணி திரள்வீர்

அன்பார்ந்த தமிழக மக்களே!

தம் வாழ்நாள் முழுவதும் ஈழத்தமிழரின் உரிமைக்காகப் பாடுபட்ட நம் அருமைத் தலைவர் ராஜீவ்காந்தியை தமிழினத் துரோகிகள் படுகொலை செய்துவிட்டனர் என்ற உண்மையை நம் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு உரக்க முழங்கியுள்ளார். ஆனால் நன்றி கொன்ற தமிழ் மக்களோ தலைவர் ராஜீவ்காந்தி சிலையை உடைத்துப் போடுகின்றனர். தலைவர் ராஜீவ்காந்தி இந்த நன்றி கொன்ற தமிழினத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்ப்போம்.

யாழ்பாணத்தில் போரில் வெற்றி முகத்தில் இருந்த ஈழப்புலிகளை அடக்க இலங்கைக்கு அமைதிப் படை அனுப்பி பத்தாயிரம் தமிழர்களைக் கொன்று வீடுபேறளித்த அருமைத் தலைவரின் சிலையைத் தகர்ப்பதை எந்த மானங்கெட்ட தமிழன்தான் பொறுத்துக் கொண்டிருப்பது? எத்தனை தமிழச்சிகளின் தாலி பறிபோகவும், கற்பு களவு போகவும் காரணமாக இருந்தார் நம் அருமைத் தலைவர் ராஜீவ்காந்தி? அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கலாமா? அப்படி மாசு கற்பிக்கும் தமிழினம் உயிரோடு இருக்கலாமா?

அதற்காக அண்டைநாட்டில் வாழும் தமிழர்களைக் கொல்லும் பணியில் ஈடுபடும் சிங்களப் படைக்கு ரேடாரும் அவர்களின் விமானங்களை இயக்கி குண்டு போட விமானிகளையும் அன்னை சோனியாவின் ஆசி பெற்ற பொருளாதார மேதை மன்மோகன் சிங்கின் அரசு அளித்தால் தவறா? நம் நாடு வறுமையில் இருந்தாலும் இலங்கை அரசு ஆயுதம் வாங்க நானூறு கோடி கொடுத்து நன்றி கொன்ற தமிழினத்தை அழிக்கும் திருப்பணியில் பங்கு கொண்ட இந்திய அரசைப் பழிக்கலாமா? தமிழ்நாடு இருளில் இருந்தாலும் சிங்கள நாட்டுக்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் போட்டால் சிலருக்கு பொறுக்க முடியவில்லை. இங்குள்ள சில துரோகிகள் நம்மைத் தூற்றுகிறார்கள். அவர்களைச் சும்மா விடலாமா? பொடா, தடா, குண்டர் சட்டங்கள் எதற்காக உள்ளன? பிடித்து உள்ளே போட வேண்டாமா?

நம் தயவில் ஆட்சி நடத்தும் துரோகி கலைஞர் கருணாநிதி பிரிவினைவாதிகளோடு கைகோர்த்து மனித சங்கிலி நடத்துகிறாரே! பொறுத்துக் கொள்ளலாமா? நடிகர்களையும் இயக்குநர்களையும் தூண்டி விட்டு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்த வைத்தாரே கலைஞர் கருணாநிதி. அவர் ஆட்சி நீடிக்கலாமா? அதற்காகத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகத் தேவையில்லை; தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுங்கள் என்று சொல்கிறோம்.

நாம் கொடுத்த நானூறு கோடியில் ஆயுதம் வாங்கி தமிழக மீனவர்களையும் கொல்கிறது என்கிறார்கள் சிலர். தமிழன் எங்கிருந்தால் என்ன? சாக வேண்டியவன்தானே! காங்கிரசுக்கும் நம் நல்வாழ்வுக்கும் தடையாக இருக்கும் தமிழர்கள் செத்துத் தொலைய வேண்டியதுதானே!

தமிழனின் மானம் கப்பலேறக் கூடாது என்பதற்காக கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு நாம் என்ன செய்தோம்? அவரை மண்ணெண்ணையும் அரிசியும் விற்க வைத்து அரசியலை விட்டே ஓட வைத்தோம். அதுதானே மரத்தமிழர் காங்கிரசின் கடமை. அந்த வழியில் செல்வதுதானே தலைவர் தங்கபாலுவின் வழியும் அண்ணன் ஞானசேகரனின் வழியும். நாம் பாதை மாறலாமா?

நம் தலைவர் தங்கபாலு சொல்வதைத் தட்டாமல் ஏற்றுக் கொண்டு முதல்வர் கலைஞர் அமீரையும் சீமானையும் சிறைபிடித்தார் அல்லவா? அதே போல் கலைஞர் கருணாநிதி மயிலை மாங்கொல்லையில் பேசும்போது ஒட்டு மொத்தமாக தமிழர் அனைவரும் சாவோம் என்று சொன்னாரே. அதை நிறைவேற்றி கடனைக் கழித்து விடுவதுதானே காங்கிரசாரின் கடமை. அனைவரும் இந்திய அரசோடு கைகோர்த்து சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கி, கூடவே “ஆயுதத்தால் தீர்வு வராது; பேச்சு வார்த்தையாலே தீர்வு” என்று அறிவுரையும் வழங்கி அறிவுரையை தீவிரவாத புலிகள் ஏற்கவில்லை என்ற பழியையும் போட்டு தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம். கலைஞர் கருணாநிதி வாக்கை நிறைவேற்றுவோம்.

காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, ஒகேனக்கல் பிரச்சனை ஆகியவற்றில் இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யவில்லை என்று மேடை போட்டு பேசுகின்றனர். இவர்கள் இப்படி பேசுவதற்கு உரிமை வாங்கித் தந்தது இந்த காங்கிரஸ்தான் என்பதை மறந்து விட்டுப் பேசுகின்றனர். அப்படிப் பேச விடலாமா? அந்த உரிமையை வாங்கியது இவர்கள் பேசுவதற்காகவா? இனி நம்மைத் தவிர யாரும் எதுவும் பேசக்கூடாதென முதல்வருக்கு ஆணையிடும் அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது. இழவுக்கு அழக்கூட முதல்வருக்கு நாம்தானே அனுமதி அளிக்க வேண்டும். தவறிப் போய் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வரை நாம் எப்படி பாய்ந்து பிடுங்கினோம். அதைக்கூட அறியாமல் மைக் கிடைத்து விட்டது என்று வாய்கிழியப் பேசுகிறார்கள் இந்த இயக்குநர்கள். இந்தப் பிரிவினைப் பேச்சை எப்படி அனுமதிப்பது? இதிலெல்லாம் நமக்குத் துணை நின்ற செல்வி ஜெயலலிதாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம் அன்னை சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று சொன்னதை மறந்து விட்டு இந்த விஷத்தில் நாம் அவரோடு கை குலுக்க வேண்டும்.

தங்கபாலு கோஷ்டி, வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி …. இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக பிரிந்து கிடப்பதற்கு காங்கிரஸ்காரர்களாகிய நமக்குத்தானே உரிமை உள்ளது. இந்தப் பிரிவினையை மறந்து விட்டு நதிநீர், மின்சாரம், அரிசி என்று பிரிவினை பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதைத் தமிழகத்தில் மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதுதானே இந்திய இறையாண்மை. மராட்டியத்தில் சொன்னால் மரண அடி கொடுக்கிறான். அசாமின் எல்லைக்குள் விட மறுக்கிறான். காஷ்மீர் கண்ணெதிரே கழன்று செல்கிறது. கருநாடகத்தான் அவன் மட்டுமே இந்தியா என்று நினைத்துக் கொள்கிறான். இளிச்சவாய் தமிழனிடத்தில்தான் நம் இறையாண்மை, ஒருமைப்பாடு பஜனை செல்லுபடியாகும். செல்லுபடியாகும் இடத்தில் விற்பதுதானே நல்ல வியாபாரிக்கு அழகு. நமக்கு இது தெரியாதா? இது தெரியாமல் இன உணர்வு, அது இது… என்று இங்குள்ள சில ஏமாளிகள் பிதற்றித் திரிய கதர் சட்டைப் போட்ட காங்கிரஸ்காரன் அனுமதிப்பானா? அகிம்சை வழியில் கைது செய்து உள்ளே தள்ளி நாலு சாத்து சாத்தினால் போதாதா?

இப்படி இலங்கையிலும் இங்கும் தமிழினத்தை ஒரே அடியாக அழித்து விட்டு சிங்களரை ஓட்டுப் போட வைத்து நாம் நாட்டை ஆள்வோம். அடுத்த முறையாவது அன்னை சோனியாவின் ஆட்சி மலரப் பாடுபடுவோம். அந்த அமைச்சரவையில் தலைவர் தங்கபாலுவையும் அண்ணன் ஞானசேகரனையும் அமர்த்தி அழகு பார்ப்போம்.

ஜெய் ஹிந்த்! ஒழிக தமிழினம்!!

இப்படிக்கு
மானங்கெட்ட மரத்தமிழர் காங்கிரஸ்

(பின் குறிப்பு: இந்த நோட்டீஸ் எந்த வித பிரிவினைவாத எண்ணத்தோடும் இன மோதல்களைத் தூண்டும் எண்ணத்தோடும் வெளியிடப்பட வில்லை என்பதால் இதன்மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எங்கள் உடலில் ஓடும் சாக்கடை நீரால் காவல்துறையின் கால்களைக் கழுவி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.)